புதுக்கோட்டை,செப்.30: தமிழ்நாடு துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து புதுக்கோட்டையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினர் அதனை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றத்தை தொடர்ந்து புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் சிலைக்கு திமுக மாநகர செயலாளர் செந்தில் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதன் பின்னர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினார். இதேபோன்று புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரில், உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளதை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் திமுக நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில், கவுன்சிலர் செந்தாமரை பாலு, வட்ட செயலாளர் சத்தியா உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.