பெரம்பலூர், ஜூலை, 31: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரும் பொதுமக்கள் திடீரென தீ குளிப்பு சம்வத்தில் ஈடுபடுவதால், தீ அணைப்பு துறையினர் உஷார் நிலையில் உள்ளனர். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கிரேஸ் பச்சா பொறுப்பேற்றதும், கடந்த வாரம் திங்கள் கிழமை பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, குறைகளைக் கேட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அந்த நேரத்தில், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தவர்கள் அடுத்தடுத்து தீ குளிக்க முயற்சித்த மூன்று சம்பவங்களில் ஈடுபட்டனர். அவற்றை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, கடந்த திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெறும்போது, பெரம்பலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உஷார் நிலையில் இருந்தனர். ஆனால், கடந்த வாரத்தைப்போன்று, தீ குளிப்பு சம்பவங்கள் ஏதும் நடைபெறாததால், போலீசார் நிம்மதியடைந்தனர்.