திருவலம்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பேரூராட்சியில் பொன்னை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ராஜேந்திரா இரும்பு பாலம் உள்ளது. இந்த பாலம் பல்வேறு மொழிகளை சேர்ந்த சினிமாக்கள் மற்றும் டிவி சீரியல்களில் இடம்பெற்றுள்ளது. சென்னையில் இருந்து திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பலர் இரும்பு பாலத்தில் புகைப்படம் எடுத்துச்செல்வர். இப்பாலத்திற்கு மிக அருகே பொன்னையாறு-பாலாறு கலக்கிறது. காட்பாடி நெடுஞ்சாலைத்துறையின் (கட்டுமானம் பணி மற்றும் பராமரிப்பு) கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த தொடர் கனமழை காரணமாக பொன்னையாற்றில் அபாய அளவுக்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாலத்தில் உள்ள தார் சாலை வெகுவாக பாதித்துள்ளது. ஆங்காங்கே விரிசல்களும் உருவாகியுள்ளன. குறிப்பாக கான்கிரீட் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகிறது. கம்பியில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகிறது. கடந்த 4 மாதங்களில் பலர் விபத்தில் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாலத்தில் உள்ள தார்சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….