திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றபோது விபத்து கார்-லாரி நேருக்குநேர் மோதி தொழிலதிபர் உட்பட 7 பேர் பலி: 3 பேர் படுகாயம்

கண்ணமங்கலம்:  வேலூர் அடுத்த விருபாட்சிபுரத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் மூர்த்தி (55). நேற்று, ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலில் வழிபட மூர்த்தி குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி, மூர்த்தி தனது மனைவி கமலா(54), மகன் சசிகுமார்(25), மருமகள் பரிமளா(23), பேரக்குழந்தை நிஷா (3 மாதம்) மற்றும் உறவினர்கள் கோமதி(26), ராதிகா(45), முனியம்மாள்(65), மாலதி(45), பூர்ணிமா(21), குமரன்(4) ஆகியோருடன், காரில் நேற்று புறப்பட்டு சென்றார். காரை மகன் சசிகுமார் ஓட்டிச்சென்றார்.பிற்பகல் 2 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் அடுத்த முனியந்தாங்கல் அருகே சென்று கொண்டிருந்தபோது, காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்த கார், போளூரில் இருந்து சந்தவாசலுக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு எதிரே வந்த லாரி மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் அலறியபடி கூச்சலிட்டனர். இந்த விபத்தில் தொழிலதிபர் மூர்த்தி, மகள் பரிமளா, பேரக்குழந்தை நிஷா, உறவினர்கள் கோமதி, ராதிகா, முனியம்மாள், கமலா ஆகிய 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சசிகுமார், மாலதி, பூர்ணிமா ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்தின்போது, லாரி டிரைவர் தப்பியோடிவிட்டார். இதுபற்றி, சந்தவாசல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி

நாகர்கோவிலில் அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சம்

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை