திருப்புவனம்,அக்.8: திருப்புவனத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊர்வலமாக வந்து பேரூராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர். திருப்புவனம் பேரூராட்சி 8வது வார்டு உச்சிமாகாளி அம்மன் கோயில் தெருவில் தனியார் கடை கட்டி ஆக்கிரமித்துள்ளார். உச்சிமாகாளியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நாளை துவங்குகிறது. ஏராளமான பொதுமக்கள் அம்மனை வழிபாடு செய்ய வந்து செல்வார்கள்.
ஆக்கிரமிப்பால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும். உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் கோயிலுக்கு செல்ல வசதி செய்து கொடுக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதை சரி செய்யவும் கோரி, உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் பொதுமக்கள்,பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கணேஷிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலர் மனு கொடுக்க வந்தவர்களிடம் சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.