திருவாரூர், ஆக. 29: திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலில் தூய்மை பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மாநிலம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இது மட்டுமின்றி கோயில் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோயில்களை மாதந்தோறும் ஒரு முறை கோயில் வளாகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுத்தம் செய்ய வேண்டும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில், நாகை இணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் (பொ) ராணி ஆகியோர் உத்தரவின் பேரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை அந்தந்த கோயில் செயலல் அலுவலர்கள் மூலம் ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் ராகு, கேதுவிற்கு பெயர் பெற்ற கோயிலாகவும், பம்பரநாதர் கோயில் என அழைக்கப்பட்டு வரும் சேஷபுரீஸ்வரர் கோயிலில் நேற்று செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் மேற்பார்வையில் கோயில் ஊழியர்கள், சிவனடியார்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.