திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் ஊழியர்களிடம் தகராறு செய்ததாக இந்து மக்கள் கட்சி பிரமுகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருநாகேஸ்வரம் மணல்மேடு தெருவில் வசிப்பவர் கணேசன் மகன் ஹரி (30). இந்து மக்கள் கட்சியின் திருவிடைமருதூர் ஒன்றிய இளைஞர் அணி தலைவர்.
இவர் நேற்று திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதர் சுவாமி கோயில் அலுவலகத்துக்கு தனது கூட்டாளிகள், அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (28), மணிகண்டன் (32) ஆகியோருடன் சென்று ஊழியர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அலுவலக கண்காணிப்பாளர் புகழேந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததால் தெரிகிறது. இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் உமாதேவி கொடுத்த புகாரின் பேரில் திருநீலக்குடி போலீசார் வழக்கு பதிந்து ஹரி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.