Thursday, October 3, 2024
Home » திருத்தணியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர், அவரது மனைவியை கொன்று ஆந்திராவில் உடல் புதைப்பு: தங்கை மகன் உள்பட 2 பேர் கைது

திருத்தணியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர், அவரது மனைவியை கொன்று ஆந்திராவில் உடல் புதைப்பு: தங்கை மகன் உள்பட 2 பேர் கைது

by kannappan

சென்னை: நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு தாய்மாமன், அத்தை ஆகியோரை கொன்று ஆந்திராவில் புதைத்த தங்கை மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பைபாஸ் சாலையில் வசித்தவர் சஞ்சீவிரெட்டி (68). இவர், ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி மாலா (55). இவர்களது மகன் ஜெயகாந்தன். இவர், பெங்களூருவில் உள்ள கட்டிட கான்டிராக்டர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர்களது மகள் ஜோதிஸ்ரீ, இவர் குடும்பத்துடன் சித்தூரில் வசித்தார். கடந்தமாதம் 28ம் தேதி, ஜோதிஸ்ரீ உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இதன்பிறகு அவரது மகள் லோச்சி (21) அடிக்கடி தனது தாத்தா சஞ்சீவிரெட்டியுடன் பேசியுள்ளார். கடந்த கடந்த 29ம் தேதி தாத்தா சஞ்சீவிரெட்டி, செல்போனுக்கு தொடர்புகொண்டார், அப்போது, அவர் போனை எடுக்கவில்லை. பலமுறை முயற்சித்தும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த லோச்சி, உடனடியாக திருத்தணி அருகே பட்டாபிராமபுரம் கிராமத்தில் வசிக்கும் மற்றொரு தாத்தா பாலுவுக்கு போன் செய்து கூறியுள்ளார்.இதையடுத்து பாலு தனது விவசாய பணிகளை விட்டுவிட்டு உடனடியாக பைக்கில் தனது அண்ணன் சஞ்சீவி ரெட்டி வீட்டுக்கு விரைந்துள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது எதுவும் தெரியவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தததாக தெரிகிறது.இதுபற்றி சித்தூரில் வசிக்கும் மருமகன் பழனிக்கு பாலு தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு பழனி வந்து பார்த்தார். அந்த வீட்டில் சஞ்சீவிரெட்டியும் மனைவியும் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். ‘இதுபற்றி திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசரணையில் செல்போன் டவரை வைத்து விசாரித்தபோது சஞ்சீவி கடைசியாக புத்தூர் ராமசமுத்திரம் மண்டல பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து பேசியிருப்பதாக தெரிவித்தது. திருத்தணி போலீசார் உடனடியாக ஆந்திர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்று பார்த்தபோது எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதுபற்றி மேலும் நடத்திய விசாரணையில், சஞ்சீவி ரெட்டியிடம் அவரது தங்கை மகன் ரஞ்சித்குமார் (28) பேசியிருப்பது பதிவாகியிருந்தது. இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில், திருத்தணி பைபாஸ் சாலையில் சுவீட் கடை வைத்திருக்கும் ரஞ்சித்குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பதற்றத்துடன் முன்னுக்குபின் முரணாக பேசினார். தீவிர விசாரணைக்கு பிறகு மாங்காபுரம் காலனியை சேர்ந்த விமல்ராஜ் என்பவருடன் சேர்ந்து தனது தாய்மாமன் சஞ்சீவிரெட்டி, அத்தை ஆகியோரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு ஆந்திராவுக்கு விரைந்தனர். அவர்கள் இரண்டு பேரையும் கொன்று புதைத்த இடத்தை காண்பித்தனர். இதையடுத்து சடலத்தை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், ‘நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு தாய்மாமன், அத்தை ஆகியோரை கொன்றதாக ரஞ்சித்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு உடந்தையாக விமல்குமார் செயல்பட்டுள்ளார்’ என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi