திருவாடானை, ஜூலை 22: திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு அதிக அளவிலான வாகனங்கள் வந்து செல்கின்றன குறிப்பாக வெளி மாநிலங்களை சேர்ந்த வாகனங்களும் இந்த சாலை வழியாக பயணிக்கின்றன. இந்நிலையில் சிகே.மங்கலம், ஏஆர்.மங்கலம், செங்கமடை, இந்திரா நகர், மேல் பனையூர் ஆகிய சாலையோரம் அமைந்துள்ள கிராமங்களில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள மின்விளக்குகள் எரியாததால் கிராமப் பகுதிகளில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் வாகனங்கள் செல்வது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் சாலையில் நிற்பது தெரியாமல் வாகனங்கள் கடந்து செல்கின்றன அந்த சமயங்களிலும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலையில் எரியாத மின்விளக்குகளை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.