கோவில்பட்டி, நவ. 26: திருச்சியில் இரு நாட்கள் நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட இளம்விஞ்ஞானிகளை கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ வழியனுப்பி வைத்தார். திருச்சியில் செயல்படும் நேரு நினைவு கல்லூரியில் 31வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 2 நாட்கள் நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பங்கேற்கச் செல்லும் இளம் விஞ்ஞானிகளை பாராட்டி வழியனுப்பும் விழா கோவில்பட்டியில் நடந்தது. கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் பாண்டி தலைமை வகித்தார். யுபிஎம்எஸ் பள்ளி முதல்வர் அமுதவல்லி, என்சிஎஸ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமாரி முன்னிலை வகித்தனர். என்சிஎஸ்டிசி இயக்க கல்வி ஒருங்கிணைப்பாளர் மோகன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற கடம்பூர் ராஜூ எம்எல்ஏ, தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட இளம் விஞ்ஞானிகளை பாராட்டி பரிசுகள் வழங்கி வழியனுப்பி வைத்தார். பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளி முரளி நன்றி கூறினார்.