உடுமலை, ஜூலை 18: உடுமலை கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் உடுமலை அரசு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நாளை (19-ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தெரிவித்துள்ளார்.சத்தியமங்கலம், ஜூலை 18: பவானிசாகரில் தியாகி ஈஸ்வரனின் திருவுருவச்சிலை, மணிமண்டபம் கட்டும் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார்.
பவானிசாகர் அணை கட்ட காரணமாக இருந்த சுதந்திர போராட்ட தியாகியும், முன்னாள் எம்எல்ஏவுமான ஈஸ்வரன். இவருக்கு திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என கீழ்பவானி பாசன விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, தியாகி ஈஸ்வரனுக்கு பவானிசாகரில் திருவுருவச்சிலை மற்றும் மணிமண்டபம் கட்டப்படும் என கடந்த 2022ம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், தியாகி ஈஸ்வரனுக்கு வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டும் பணிக்காக ரூ.3 கோடியே 4 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து, கடந்த 28.6.2023ல் கட்டுமான பணி தொடங்கியது. தற்போது கட்டுமான பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் நேற்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் தியாகி ஈஸ்வரனின் மணிமண்டபம் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன், சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேந்திரன், பவானிசாகர் தெற்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், ஒப்பந்ததாரர் செல்வம், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுப்பணித்துறை, செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.