திண்டுக்கல், நவ. 17: திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அனுமந்த நகரில் ஓம் சிவஹரி சரணம் ஐயப்பன் தேவஸ்தானம் புதிதாக அமைந்துள்ளது. இங்கு நேற்று மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேக பூஜைகள்நவ.14ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து நேற்று காலை கணபதி ஹோமம், அதிவாச பூஜை, விக்ரகம் எழுந்தருள செய்தல், பீடம் பிரதிஷ்டை செய்தல், கலச பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் ஐயப்பன் சரண கோஷங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் சபரிமலை மாளிகைபுரம் முன்னாள் மேல் சாந்தி அனிஷ் நம்பூதிரி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இதில் அனுமந்தநகர், மாலைப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் கும்பாபிஷேக குழுவினர் செய்திருந்தனர்.