மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே மாங்குளம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், நேற்று காலை பள்ளிக்கு வந்தார். அப்போது மாணவியின் கழுத்தில் தாலிக்கயிறு தொங்கியுள்ளது. இதை பார்த்த சக மாணவி ஒருவர், விளையாட்டாக போட்டு வந்திருப்பதாக கருதி கிண்டல் செய்துள்ளார். ஆனால், அந்த மாணவி அழுதுகொண்டே கடந்த 6ம் தேதி தனக்கு திருமணம் நடந்து விட்டதாகவும், இதை மறைத்து பெற்றோர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, இதுகுறித்து வகுப்பாசிரியரிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி நிர்வாகம், போலீஸ், சமூகநலத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். இதில், மாணவிக்கு சிறார் திருமணம் நடந்திருப்பது உறுதியானது. சம்பவம் தொடர்பாக ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் கூறுகையில், “சமூகநலத்துறையிடமிருந்து புகார் வந்ததும், மாணவிக்கு திருமணம் நடந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்’’ என்றனர். …