வருசநாடு, ஜூலை 6: தேனி மாவட்டம், தும்மக்குண்டு அருகே சீலமுத்தையாபுரம் முதல் முத்துராஜபுரம் கிராமம் வரை 3 கிமீ தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மண் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. மேலும் உரிய பராமரிப்பு இல்லாததால், இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதேபோல் வீரசின்னம்மாள்புரம், வண்டியூர் கிராமத்திற்கு உரிய சாலை வசதி ஏற்படுத்தி தரப்படவிவில்லை.
இதனால் முத்துராஜபுரம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தினந்தோறும் கால்நடையாகவே நடந்து செல்கின்றனர். விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தலைச்சுமையாக சுமந்து செல்கின்றனர். இப்பகுதிகளில் தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர கோரி பொதுமக்கள் சார்பில் மாவட்டம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இப்பகுதி கிராம பொதுமக்கள் நலன் கருதி, மேற்கண்ட பகுதிகளில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.