‘‘ஏழைகள் மற்றும் விவசாயிகளை விட மற்றவர்கள் தான் நகைக் கடன் தள்ளுபடியால் பயன்பெற்றதாக சொல்றாங்களே… அதுவும், ஆளுங்கட்சியினர் சந்தோஷத்தில் இருக்காங்களாமே உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ தமிழக அரசு திடீரென கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த நடவடிக்கை ஏழை மற்றும் விவசாயக் குடும்பத்தினரை விட குடும்பத்தினரைக் காட்டிலும், ஆளும்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்களை மிகவும் குஷிபடுத்தியுள்ளதாம். ஒருத்தர் 30 சவரனை பிரித்து அடிக்கடி கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி இருக்காரு…அவரு பெரிய ரியல் எஸ்டேட் அதிபராம்… அவருக்கும் இந்த தள்ளுபடியால் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்காராம். இதேபோலத் தான் தங்களின் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆளுங்கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர். இதையும் மறைமுகமாக ஓட்டுக்கு துட்டு… தள்ளுபடி என்ற பெயரில் நடந்ததாக பேச்சு தமிழகம் முழுவதும் ஓடுது. பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் பழைய தேதியை போட்டு தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணம் கொடுப்பது போல கொடுத்து… 50:50 பர்சென்ட் பிரிச்சிக்கிறாங்களாம். அதில், ஆளுங்கட்சியினர் தான் டாப்பில் இருக்காங்களாம். இதில் குயின்பேட்டை மாவட்டம் தலங்கை கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.6 கோடிக்கு கடன் வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வளமான கூட்டுறவு வங்கியிலும் ரூ.4 கோடிக்கு மேல் கடன் வழங்கப்படாத நிலையில், ஒதுக்குப்புறமான கிராமத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் எப்படி ரூ.6 கோடிக்கு கடன் வழங்கியிருக்க முடியும் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினாங்களாம். இங்கே உள்ளவர்களில் பலர் சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் வேலை செய்பவர்களாம்… அதில் கடன் வைத்தவர்கள் இரட்டை மகிழ்ச்சியில் இருக்காங்களாம். இதுதொடர்பாக தகவல் அறிந்த அரசுத்துறை அதிகாரிகள் கூட்டுறவு வங்கியில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று அதிகாரிகள் மழுப்பினாலும், பொதுமக்கள் நம்புவதாக இல்லை. இந்த வங்கியில் கடன் வழங்கியதில் பல்வேறு உள்ளடி வேலைகள் நடந்திருப்பதாக அங்கு பணிபுரிபவர்களில் நேர்மையான சிலரே புலம்பி வருகிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேர்தல் செலவுகளை இன்ஸ்பெக்டர்கள் தலையில் கட்டினால்… அவர் யார் தலையில் கட்டுவார்…’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘தேர்தல் விழிப்புணர்வு, தேர்தல் அணிவகுப்பு உள்ளிட்ட பணிகளுக்காக அந்தந்த மாவட்ட காக்கிகளுக்காக ஒரு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். கடலோர மாவட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த தொகையை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் எடுத்து செலவு செய்வதில்லையாம். அதற்கு பதிலாக உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள அந்தந்த காக்கி இன்ஸ்பெக்டர்களிடம் அதற்கான செலவு தொகையை ஏற்றுக்கொள்ளும்படி எஸ்பி அலுவலகத்தில் இருந்து உத்தரவு வருதாம். இதனால் உள்ளூர் காவல் நிலையங்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் இப்படி தேர்தல் செலவுகளை எங்கள் தலையில் கட்டினால் எப்படி சமாளிப்பது. இந்த செலவு தொகை ஈடு செய்ய சில நேரங்களில் கடைகளில் உணவு, டீ, பிஸ்கட் போன்றவற்றை வாங்க கையேந்தி நிற்க வேண்டியுள்ளது. இப்படி கையேந்தி நிற்பதால் கடையின் உரிமையாளர்கள் சொல்லும் சிலவற்றை செய்து கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகிறது. தேர்தல் செலவிற்கு என்று ஒதுக்கப்படும் நிதியை எஸ்பி அலுவலகத்தில் இருந்து முறையாக செலவு செய்தால் எங்களுக்கு ஏன் இந்த நிலை ஏற்படுகிறது என தலையில் அடித்தவாறு காக்கி இன்ஸ்பெக்டர்கள் புலம்புகின்றார்களாம்… செலவு அதிகமானால் வேறு வழியில்லை… மனு கொடுக்க வருபவரின் தலையில் தான் கட்ட வேண்டும் என்று புலம்புகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஐந்து வருஷத்துக்கு பிறகு நல்ல யோகம் வந்து இருக்கு… தமிழ்நாட்டுல ஆட்சியை பிடிக்க இலை தலைமை நம்மல தாமரைக்கிட்ட அடிமையாக்கிவிடப்போறாங்கனு… புதுச்சேரியை சேர்ந்த இலை நிர்வாகிகள் அதிர்ச்சியில் இருக்காங்களாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ புதுவை சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்போது தான் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் அணியில் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தாமரை கூட்டணியில் இலை, மாம்பழம்,. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாக நிற்கிறது.புதுவையில் காங்கிரஸ் ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையில் தாமரை, புல்லட்சாமி கட்சி, இலை. ஆகிய கட்சிகள் இணைந்து செயல்பட்ட போதிலும் முதல்வர் வேட்பாளர் பிரச்னையால் புல்லட்சாமி உஷாராக இருக்கிறாராம். அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தாமரையுடன் கூட்டணி வைக்க வேண்டாம்னு சொல்றாங்களாம். புல்லட்சாமி கட்சி தங்களது கூட்டணியிலேயே நீடிக்கும் என்று நம்பிய தாமரைக்கு, அவர் அதிர்ச்சி கொடுக்கும் வகையில், கூட்டணி பேச்சுவார்த்தையில் கண்ணாமூச்சி காட்டி வருகிறாராம். இது தாமரை தலைவர்களிடையே அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளதாம். இதனால் புல்லட்சாமி, தனித்து போட்டியிட தயாராகி வருவது உறுதியாகி உள்ளதாம். புல்லட்சாமியை நம்ப வேண்டாம் என புதுவை நிர்வாகிகளுக்கு தாமரை டெல்லி தலைமை சொல்லிடுச்சாம். இதற்கிடையில் புல்லட்சாமி கட்சியின் கூட்டணியில் இருந்தால் தான் இலை வெற்றி பெறும். தாமரை, மாம்பழத்துடன் இருந்தால் இலை நிச்சயம் ஜெயிக்காது… தாமரைக்காக நம்மை பலிக் கொடுக்க பார்க்கிறார்கள் என்று இலையின் முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்காங்களாம்… சாமியை ஆட்டி வைச்ச ‘பாச்சா’ புல்லட்சாமியிடம் பலிக்காது என்கின்றனர் அவரது கட்சியினர்…’’ என்றார் விக்கியானந்தா. …