காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த தாட்டித்தோப்பு பகுதியில் சேதமடைந்த தரைப்பாலத்தை 3 ஆண்டுகளுக்கும் மேலாகியும் புதுப்பிக்கவில்லை என்றும் விரைவில் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட 41 வது வார்டு பகுதியில் தாட்டித்தோப்பு மற்றும் முருகன் நெசவாளர் குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து செல்லும் வழியில் வேகவதி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். மேலும் இந்த பாலம் வழியாக அருகில் உள்ள செல்லியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பாலம் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர், நெசவாளர்கள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் கம்பெனிகளுக்கு சென்றுவிட்டு இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது மேடு பள்ளம் தெரியாமல் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கடந்த 3 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ள இந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….