திருவண்ணாமலை, ஆக.10: உலக பழங்குடியினர் தினத்தையொட்டி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பழங்குடியின மக்கள் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது, தலையில் தேங்காய் உடைத்து கொண்டாடினர். உலக பழங்குடியினர் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள குருமன்ஸ் இனத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு பாரம்பரிய திருவிழா நிகழ்ச்சியை நேற்று நடத்தினர். அதன்படி, குருமன்ஸ் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தும், தலையில் தேங்காயை உடைத்தும், உலக பழங்குடினர் தினத்தை விழாவாக கொண்டாடினர். பல நூறு ஆண்டுகளாக கடைபிடித்து வரும் தங்களின் பாரம்பரியத்தை வெளிகாட்ட, கலெக்டர் அலுவலகம் முன்பு இந்நிகழ்ச்சியை நடத்தியதாக அதில் பங்கேற்றவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.