தஞ்சாவூர், செப்.11:தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துறைகளான இலக்கியத்துறை, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி மற்றும் மொழிபெயர்ப்புத்துறை ஆகிய மூன்று துறைகள் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் ஆங்கிலத்துறையுடன் இணைந்து 09.09.2024 முதல் 08.09.2027 வரை மூன்றாண்டுகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவள்ளுவன் தலைமையில் பதிவாளர் தியாகராஜன் முன்னிலையில் இலக்கியத்துறை தலைவர் தேவி, இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி துறைத்தலைவர் கவிதா மற்றும் மொழிபெயர்ப்புத்துறை துறைத்தலைவர் முருகன் மற்றும் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் மற்றும் துறைப் பேராசிரியர்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்களும் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகளும் இரு கல்வி நிறுவனங்களிலும் நடைபெறும் அறக்கட்டளை சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் பிற நிகழ்வுகளிலும் பங்கேற்று பயனடையும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.