சென்னை: ”தமிழ்ப்பற்றில் தீவிரமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கலைஞரின் கைவண்ணத்தில் வெளி வந்த புத்தகங்களை அரசுடமையாக்க வேண்டும்” என்று திமுக இலக்கிய அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திமுக இலக்கிய அணி செயலாளர் புலவர் இந்திரகுமாரி, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உருவான தொன்மையான மொழி தமிழ்மொழி. தமிழ்மொழியில் இருந்து பிரிந்த பல மொழிகள் காணாமல் போய் விட்டன. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தாய்நாட்டுப்பற்றும், தாய்மொழி பற்றும் மிக அவசியம் என்பதை உணர்த்தி அந்த தாய்மொழிக்கு மகுடம் சூட்டுகின்ற வகையில் செம்மொழி அந்தஸ்த்தை பெற்றுக்கொடுத்தவர் கலைஞர். இயல், இசை, நாடகம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் தன் கைவண்ணத்தில் தமிழன்னையின் பெருமையை உயர்த்தி பிடித்து, பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவராலும் வியந்து போற்றும்படி தமிழை வளர்த்தவர்கலைஞர். அவர் கைவண்ணத்தில் வெளிவந்த திருவள்ளுவரின் திருக்குறளுக்கு உரை. எளிதாக்கப்பட்ட இலக்கணநூல் தொல்காப்பியம், சிறுகதைகள், புதினங்கள், கவிதைத்தொகுப்புகள் என்று அவர் கையாண்ட தமிழ் வரலாறு ஏராளம். தமிழ்ப்பற்றில் தீவிரமாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கலைஞரின் கைவண்ணத்தில் வந்த புத்தகங்கள் தமிழ்வரலாற்றின் அடிச்சுவற்றில் மறக்க முடியாது. அத்தகைய முத்தமிழறிஞரின் கைவண்ணத்தில் வெளிவந்த புத்தகங்கள் அனைத்தும் அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி தமிழ்நாட்டின் முதல்வரான தங்கள் திருக்கரங்களில் ஒப்படைத்திருக்கிறது….