ஈரோடு, அக்.17: தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட கருவூல அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மாவட்ட தலைவர் ராக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தில் கூறப்பட்டுள்ள மனித வள மேலாண்மை அரசு பணியிடங்களை காலியாக்கி முற்றாக ஒழித்து கட்டி தனியார் வசம் ஒப்படைத்துவிடும் ஒரு முயற்சியாகும்.
இத்திட்டத்தை செயல்படுத்துவது எனும் போர்வையில் அரசின் வரவு-செலவு மற்றும் ஊழியர் தொடர்பான தனி நபர் தரவுகள், அரசின் நிதி கட்டுப்பாடு போன்ற புள்ளி விவரங்களை கடந்த அதிமுக அரசு தனியார் வசம் ஒப்படைத்து மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டது. எனவே, இத்திட்டத்தை தற்போதைய ஆளும் அரசு கைவிட வேண்டும். புதிய காப்பீடு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திட வேண்டும். அதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.