சென்னை : தமிழ்நாடு அரசின் வலிமை சிமெண்ட் சந்தைக்கு வரும் போது மற்ற சிமெண்டுகளின் விலை குறையும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், அண்டை மாநிலங்களில் ரூ. 350க்கு சிமெண்ட் விற்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் ரூ. 450 வரை விற்கப்படுவதாக கூறினார். சிமெண்ட் விலை உயர்வை தடுக்க அரசே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த ஜூன் மாதம் ரூ. 490 வரை விற்பனை செய்யப்பட்ட சிமெண்ட் ஆலை அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ரூ. 450க்கு குறைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். டான்செம் மூலம் புதிய கிளை உருவாக்கப்பட்ட பின், 17 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அமைச்சர் தங்கம் தெரிவித்தார். தற்போதைய நிலவரப்படி, ரூ. 420 க்கு சிமெண்ட் விற்கப்படுவதாகவும் தமிழ் நாடு அரசின் வலிமை சிமெண்ட் விற்பனைக்கு வந்த பின் வெளி சந்தைகளில் உள்ள சிமெண்ட் விலை குறையும் என்றும் அவர் பதில் அளித்தார். …