பரமக்குடி, ஜூலை 13: பரமக்குடியில் தமிழக அரசின் சார்பாக ரூ.3 கோடியில் புதிய ஜவுளிகள் பூங்கா அமைய உள்ளது. பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதியில் 82 கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலம் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நெசவாளர்கள் தங்களது வீடுகளிலும் நெசவு பட்டறை அமைத்து நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எமனேஸ்வரம் பகுதியில் உள்ள 30,000 சதுர அடியில் மினி ஜவுளி பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அங்குள்ள நெசவாளர்கள் பயிற்சி மையத்தில் ஜவுளி பூங்கா அமையப்பட உள்ளது.
தமிழக முழுவதும் 10 இடங்களில் மினி ஜவுளி பூங்கா அமைய உள்ள நிலையில் பரமக்குடியில் ஒரு ஜவுளி பூங்கா அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இதற்காக தமிழக அரசு சார்பாக மூன்று கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜவுளி பூங்காவில் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு ஒவ்வொரு அறையிலும் 25 நெசவு கூடங்கள் இருக்கும் வகையில் நான்கு அறைகள் கட்டப்பட உள்ளது.
மேலும் இரண்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கும் மேலும் இரண்டு கூடங்கள் தனியார் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட உள்ளது. கைத்தறி உதவி இயக்குனர் ரகுநாத் கூறுகையில், இங்கு மினி ஜவுளி பூங்காவில் உற்பத்தி செய்யப்படும் நூல் பம்பர் சேலைகள் நேரடியாக கோஆப்டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேலும் தனியார் தொழில் முனைவோர் மூலம் பட்டு ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் அதை அரசே கொள்முதல் செய்யப்படும் எனக் கூறினார்.