சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்ற 10-வது மெகா தடுப்பூசி முகாமில் நேற்று 18.21 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகிறது. கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை இருப்பதால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் இதுவரை 9 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், 10வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் செயல்பட்டது. நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 18,21,005 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.மேலும் எண்ணூர் தாழங்குப்பம் ஆரம்பப்பள்ளியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர். …