சென்னை: கொரோனா தொற்றின் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 4,099 தண்டனை கைதிகள் மற்றும் 7,616 விசாரணை கைதிகளுக்கு முதல் தவனை தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளதாக சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மத்திய சிறைத்துறை டிஜிபி சுனில் குமார் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறையில் பணியாற்றி வரும் 222 சிறை காவலர்கள், 74 விசாரணை கைதிகள், 16 தண்டனை கைதிகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதில் சிகிச்சை பலனின்றி 12 சிறைத்துறை காவலர்கள் உயிரிழந்தனர். தற்போது தமிழகம் முழுவதும் 37 சிறை காவலர்கள், 26 விசாரணை கைதிகள் தொற்றால் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க அவர்களின் உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மத்திய சிறையில் ஊழியர்கள், தண்டனை கைதிகள், விசாரணை கைதிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் மூலம் நேற்று வரை மத்திய சிறையில் பணியாற்றி வரும் 4,197 சிறை ஊழியர்கள், 4099 தண்டனை கைதிகள், 7,616 விசாரணை கைதிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாத கால இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசி போட அனைத்து நடவடிக்கைகளும் சிறைத்துறை சார்பில் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….