தமிழகம் மற்றும் அண்டை மாநிலத்தவர்கள் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் செய்ய மீண்டும் அனுமதிக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: ‘தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர், சென்னையிலிருந்து தங்களது பயணத்தை தொடங்க மீண்டும் அனுமதி வழங்க வேண்டும்’ என்று ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:2022ம் ஆண்டிற்கான ஹஜ் புனித பயணப் புறப்பாட்டு இடமாக சென்னை விமான நிலையத்தை அனுமதிக்க வேண்டுமென்று கோரி பிரதமருக்கு 11-11-2021ம் நாளன்று எழுதியுள்ள கடிதத்தின் மீது, ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விழைகிறேன். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 4,000க்கும் மேற்பட்டோர், சென்னையிலிருந்து சவுதி அரேபியாவிற்கு தங்களது பயணத்தை தொடங்குகின்றனர். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகள் பகுதிகளிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்கள் பயனடையும் வகையில் சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கும், அங்கிருந்து திரும்பி வருவதற்கும், 1987ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை நேரடி ஹஜ் விமானங்கள் இயக்கப்பட்டன. 2019ம் ஆண்டில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இருந்து 4,500க்கும் மேற்பட்டோர், தங்களது ஹஜ் புனித பயணத்தினை சென்னையில் இருந்து தொடங்கினர்.  இந்த சூழ்நிலையில், இந்திய ஹஜ் குழு, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, ஹஜ் புனித பயண புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை 21லிருந்து 10ஆக குறைக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் தங்களது புனித பயணத்தை கேரள மாநிலம், கொச்சியிலிருந்து தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோர், கொச்சிக்கு சென்று பயணத்தை தொடங்குவதால், 700 கி.மீ.க்கு மேல் கூடுதலாக பயணம் செய்ய வேண்டியுள்ளதோடு, பல சிரமங்களையும், கூடுதல் செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தற்போது சவூதி அரேபிய அரசு பல நாடுகளிலிருந்து புனித பயணமாக வருவோருக்கு கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இந்நிலையில், ஹஜ் புனித பயண புறப்பாட்டு இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இதுதொடர்பாக இஸ்லாமிய சமூகத்தினரிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோரின் வசதியினை கருத்தில் கொண்டு, 2022ம் ஆண்டு, அவர்கள் சென்னையிலிருந்து தங்களது ஹஜ் புனித பயணத்தை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை