சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்து கொள்வதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பிரத்யேகமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டப்பட்டு வருகிறது.இதற்காக 134 கோடி தொகையை, தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் தர்மபுரி, நாமக்கல், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கு கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு கட்டுவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன என்றார். தமிழகத்தில் இரண்டு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு எந்த பரிந்துரையும் செய்யவில்லை. இது சம்பந்தமாக எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை” என்றார்….