சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது தான் தற்போதைய இலக்கு. தமிழகத்தில், 71 சதவீதம் முதல் தவணையும், 32 சதவீதம் 2வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை நொச்சிக் குப்பம், பெசன்ட் நகர் ஊரூர் குப்பம், கொட்டிவாக்கம் குப்பம் மற்றும் நீலாங்கரை குப்பம் ஆகிய பகுதிகளில் வீடுகளுக்கே சென்று கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், த.வேலு, ஜே.எம்.எச்.அசன் மவுலானா, மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை கோவாக்சின் தடுப்பூசி 2வது தவணை செலுத்தாதவர்கள் 14,07,903 பேரும், கோவிஷீல்டு 2வது தவணை செலுத்தாதவர்கள் 51,60,392 என மொத்தம் 65,70,295 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டும். சென்னை நொச்சிகுப்பம் பகுதியில் உள்ள 536 வீடுகளில் 2956 பேர் வசிக்கின்றனர். இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 771 பேர், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 557 பேர். தடுப்பூசி செலுத்தாத மீதமுள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 71 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 32 சதவீதம் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது தான் இலக்கு ஆகும். நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசி போடப்படும். டெங்குவால் 456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு எழுதியவுடன் மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் 333 மன நல மருத்துவர்கள் மூலம் 21,756 மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளின் உயிருக்கு நீங்கள் தான் முழு உத்தரவாதம் அவர்களுக்கு அழுத்தம் தராமல் இருப்பது பெற்றோர்களின் கடமை. கவுன்சிலிங்கின் போது பெற்றோர் அழுத்தம் கொடுப்பதாக 5 ஆயிரம் மாணவர்கள் கூறி இருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. குழந்தைகளும் பெற்றோர்களை நினைத்து பார்த்து, வாழ்ந்து, சாதித்து காட்ட வேண்டும்.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்….
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி: 65.70 லட்சம் பேர் 2ம் தவணை போட வேண்டும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
previous post