சென்னை: தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. காலையில் 100 பேர், மாலையில் 100 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி 2 கோடியே 10 லட்சம் பேருக்கு, அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2,500 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 10 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்காக, ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடு, வீடாக டோக்கன் விநியோகிக்கப்பட்டன. இந்த நிலையில், டோக்கனில் குறிப்பிட்ட தேதியின் அடிப்படையில், இன்று காலை 8.30 மணி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் தலா ரூ.2,500 வழங்கும் பணி தொடங்குகிறது. காலையில் 100 பேர்களுக்கும், மாலையில் 100 பேர்களுக்கும் பொருட்கள் வழங்க ரேஷன் கடைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே செல்ல வேண்டும். ஆண்களுக்கு தனிவரிசை, பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி நெரிசலை தவிர்க்க வேண்டும். பொங்கல் தொகுப்பு பொருட்களை பெற வரும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இன்று முதல் 12ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கம் வழங்கப்படுகிறது. டோக்கனில் குறிப்பிட்டப்படி பொருட்கள் வாங்க முடியாவிட்டால் கடைசி நாளான 13ம் தேதி சென்று வாங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது….