சேலம், மே1: சேலம் இரும்பாலை பெருமாம்பட்டி கோயில்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை இவரது மனைவி ராதிகாவை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, மணிகண்டன் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று மாலை 3 மணியளவில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அருகில் உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மணிகண்டன் விரைந்து வந்து பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த 16 பவுன் நகையை காணாது அதிர்ச்சியடைந்தார். வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நகையை திருடி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் இரும்பாலை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.