கிருஷ்ணகிரி, ஜூலை 19: கிருஷ்ணகிரியில் வரும் 21ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் 3வது வெள்ளிக்கிழமை, தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அதன்படி வரும் 21ம் தேதி காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது ஒரு இலவச பணியே ஆகும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களின், வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இம்முகாமில், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரைச் சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுநர்கள் தேர்வு செய்ய உள்ளனர். இதில், எஸ்எஸ்எல்சி, 12ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தெரிவித்துள்ளார்.