தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட 60 மூன்று சக்கர சைக்கிள்கள் மாயம்

கடலூர், ஆக. 28: கடலூர் மாநகராட்சியில் துப்புரவு பணிக்கான தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட 60 மூன்று சக்கர சைக்கிள்கள் மாயமாகியிருப்பது தெரியவந்தது. கடலூர் மாநகராட்சி மொத்தம் 45 வார்டு பகுதிகளைக் கொண்டது. 4 மண்டலங்கள் மற்றும் 11 சுகாதார பிரிவு பகுதிகளாக பிரிக்கப்பட்டு துப்புரவு , பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுகாதார பணிக்கான வாகனங்கள் கடந்தாண்டு தமிழக அரசு கடலூர் மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன்படி 80 மூன்று சக்கர சைக்கிள்கள் வீதி வீதியாக செல்வதற்கு வசதியாக வழங்கப்பட்டது. மேலும் 17 டாடா ஏசி வாகனங்கள், 52 பேட்டரி வாகனங்கள், 3 டிராக்டர்கள் என மொத்தம் 152 வாகனங்கள் வழங்கப்பட்டது. அனைத்து வார்டு பகுதிகளுக்கும் தனியார் நிறுவனத்தின் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொண்டு வருவதால் வாகனங்களும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் துப்புரவு பணியில் தனியார் நிறுவனத்தின் முறையான செயல்பாடு இல்லாதது, வாகனங்கள் பராமரிப்பு இல்லாமலும் பல பொருட்கள் மாயமாகி உள்ளதாக மேயருக்கு புகார்கள் வந்தன. இதன் எதிரொலியாக கடந்த வாரம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாகனங்கள் சில மாயமாகியிருப்பதும், முறையான பராமரிப்பு இல்லாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி ஆணையர், தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கினார்.

இதற்கிடையே அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள துப்புரவு பணிக்கான வாகனங்கள் அனைத்தையும் ஒரேநாளில் ஆய்வுக்காக எடுத்து வருமாறுகூறி நேற்று அதிரடியாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மாநகர ஆணையர் டாக்டர் அனு, நகர் நல அலுவலர் டாக்டர் எழில் மதனா முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வில் 152 வாகனங்கள் துப்புரவு பணிக்காக மாநகராட்சியில் இருந்து தனியார் நிறுவனம் பெற்று பயன்படுத்தி வந்த நிலையில் அவற்றில் 60 ட்ரை சைக்கிள்கள் துருப்பிடித்த நிலையில் கிடந்து மாயமானதும், அதேபோல் பேட்டரி வாகனங்களில் சில பராமரிப்பின்றி ஆங்காங்கே நிறுத்திக் கிடப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, 2 நாட்களில் மேற்கண்ட வாகனங்களின் பயன்பாடு தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் மேயர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல குழு பிரசன்னா, இளையராஜா, மாமன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர். கடலூரில் துப்புரவு வாகனங்கள் மாயமாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்