தண்டவாளத்தை கடந்தபோது விரைவு ரயில் மோதி வாலிபர் பரிதாப பலி

காஞ்சிபுரம், ஜூன் 5: மீஞ்சூர் அருகே உள்ள நந்தியம்பாக்கம், வடிவுடையம்மன் நகரைச் சேர்ந்தவர் மணி. இவர், எண்ணூரில் மின்வாரிய ஊழியராக வேலைபார்க்கும் இவரது மகன் பாலாஜி (27). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி நதியா (25). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள்தான் ஆகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில், நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே பைக்கில் பாலாஜி சென்றுகொண்டிருந்தார்.அங்கு ரயில்வே கேட் மூடியிருந்த நிலையில், அருகிலுள்ள குறுகிய பாதை வழியே பாலாஜி தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது அங்குள்ள பள்ளத்தில் பைக் இறங்கியது. இதனால் அந்த பைக்கை பாலாஜி வெளியே எடுத்து தண்டவாளத்தை கடந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த விரைவு ரயில் பாலாஜி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தந்தை பெரியார் மணியம்மை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டு பயிற்சி

புகையிலை விற்றவர் கைது

சமயபுரம் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் 3 நாளாக மின்விநியோகம் நிறுத்தம்