Friday, October 4, 2024
Home » தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்றால் கடைகளுக்கு சீல் வைக்க முடிவு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்றால் கடைகளுக்கு சீல் வைக்க முடிவு

by kannappan

சென்னை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019 ஜனவரி  முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து, தமிழ்நாடு மற்றும் புதுவை பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிளாஸ்டிக் மீதான தடை செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் அறிக்கையை கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் தாக்கல் செய்து வாதிட்டார். அறிக்கையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக 36 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ததாக 167 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், பிளாஸ்டிக் ஒழிப்பில் அரசு தன்னார்வலர்களையும் சேர்த்துக்கொள்ளலாமே. ஒரு கடையில் பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்தால் போதுமா, தயாரிப்பாளர் யார் என்று கண்டறிந்து பிளாஸ்டிக்கை ஒழிக்கலாமே என்று கேட்டனர்.அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், முதல் சோதனையில்  சிறு வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது.  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை நிறுத்தாவிட்டால், அந்த கடைகளுக்கு சீல் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை திட்டம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் மஞ்சப்பைதான் வழங்கப்பட்டது என்றார்.இதைக்கேட்ட நீதிபதிகள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படுவதாக கூறினாலும், அவை தொடர்ந்து கிடைக்கின்றன. அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் பிளாஸ்டிக் பொருட்கள் வருவதை முழுமையாக தடுக்கும் வகையில் எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வு வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய மற்றும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்….

You may also like

Leave a Comment

eighteen − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi