தஞ்சாவூர், ஜூன் 12: தஞ்சை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே விலங்குகள் வதை தடுப்பு சங்கத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் வைரம் நகர் குடியிருப்புவாசிகள் வசித்து வருகின்றனர். இந்த இடம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் விஷப்பாம்புகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதாக வைரம் நகர் பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
மேலும் தினந்தோறும் வீட்டிற்கு அருகேயும், சில நேரங்களில் வீட்டிற்கு உள்ளேயும் விஷப் பாம்பு நுழைந்து விடுவதாக பொதுமக்கள் அச்சத்துடன் கூறுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, விலங்குகள் வதைதடுப்பு சங்கத்துக்கு சொந்தமான இடத்தை தூய்மையாக பராமரிக்கவும், விஷப்பாம்புகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.