வல்லம் : தஞ்சாவூர் பகுதியில் மண் வளத்தை உயர்த்த வயல்களில் ஆடுகள் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ளது.குறுவை, சம்பா, தாளடி மற்றும் உளுந்து, பயறு சாகுபடி என்று தொடர்ந்து நடந்து பின்னர் கோடை உழவும் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும். இதில் கோடை உழவை அதிகளவு விவசாயிகள் மேற்கொள்வதில்லை. காரணம் வயலை காற்றாட போட்டு வைத்து மண் வளத்தை மேம்படுத்துவர். இதனால் அடுத்த சாகுபடி பயிர்களுக்கு இயற்கையான மண் சத்துக்கள் கிடைக்கும் என்பதால் தான்.காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை மூன்று மாதங்களுக்கு வயலில் எந்த சாகுபடியும் செய்யாமல் அப்படியே விட்டு விடுவர். இந்த காலக்கட்டத்தில் இதுபோன்ற வயல்களில் புற்கள் முளைத்து வரும். அப்போது வயல்களில் ஆடு மந்தைகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.இதற்கு ஆட்டு கிடை போடுவது என்று மண் வளத்தை உயர்த்தும் என்பதால் விவசாயிகளின் ஆதரவும் அதிகம் இருக்கிறது. இப்படி ஆட்டுக்கிடை போடுபவர்கள் இரவு நேரத்தில் வயல்களில் பட்டி போடுகிறார்கள். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் வட்டமாக வலை விரித்து, அதனுள்ளே ஆடுகளை அடைத்து விடுகின்றனர்.இப்படி பட்டியில் அடைப்பதில்தான் விசேஷம் அடங்கியிருக்கிறது. காரணம், ஆடுகளின் சிறுநீரும் புழுக்கைகளும் வயலுக்கு இயற்கை உரமாக கிடைக்கும். இப்படிக்கிடை போடுவதற்காகக் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வரும் ஆடு கிடை போடுபவர்கள் சாகுபடிப் பணிகள் தொடங்கும் வரை இங்கேயே தங்கிவிடுகிறார்கள். அந்த வகையில் தற்போது தஞ்சை அருகே ஆலக்குடி, புதுகல்விராயன்பேட்டை, பூதலூர் பகுதிகளில் சாகுபடி பணிகள் முடிந்து விட்ட நிலையில் ஆட்டுக்கிடை போடப்பட்டு வருகிறது. இதற்காக பிற மாவட்ட பகுதிகளில் இருந்து வெள்ளாடுகளை லாரிகளில் கொண்டு வந்து தஞ்சாவூர் பகுதியில் இருக்கும் கிராமங்களில் தங்கி ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்கின்றனர். அந்த வகையில் வல்லம் பகுதியில் பலர் தங்கி வயல்களில் ஆட்டுக்கிடை போட்டு வருகின்றனர்.ஆண்டுதோறும் பட்டிபோட வருவதால் விவசாயிகளின் நம்பிக்கையை பெற்று விடுகின்றனர். இதனால் பல விவசாயிகள் இப்படி ஆட்டு கிடை போடுபவர்களுக்கு தங்கள் வீட்டிலேயே உணவு சமைத்து கொடுத்தும் வருகின்றனர். ஆடுகளைக் கிடை போடுவதால் வயலுக்குத் தேவையான உரம் கிடைத்துவிடுகிறது. அடுத்த சாகுபடியின்போது, அதற்கான பலன் அதிகளவில் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மத்தியில் இந்த ஆட்டுக்கிடைக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது….