தஞ்சாவூர் ஜூன் 3: அறுவடைக்கு சில தினங்களே இருக்கும் நிலையில் கோடை சாகுபடி செய்யப்பட்ட நெற்கதிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளதால் உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 40,000 ஏக்கர் பரப்பளவில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்சமயம் அறுவடை நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடைக்கு சில நாட்களே இருக்கும் நிலையில் தஞ்சாவூர் அம்மாபேட்டை, புத்தூர், உடையார்கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருவதால் நெற்கதிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களை வருவாய் துறையும், வேளாண்மை துறையும் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசையும் தஞ்சை மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.