தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 2,000 டன் நெல் அரவைக்காக தர்மபுரிக்கு சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகின்றது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்படும். அதன்பின் இந்த நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் தஞ்சாவூரிலிருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக தர்மபுரிக்கு 42 வேகன்களில் நேற்று சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.