திருச்சி, மார்ச் 6: திருச்சி காஜாமலை ஜே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் சலீம்பாஷா (43) கே.கே நகரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரிடம் பூமிகண்ணன் என்பவர் அறிமுகமாகி வெளி நாட்டிற்கு செல்ல ரூ.1.95 லட்சம் பணம் ஜி.பே மூலம் கொடுத்திருந்தாராம். ஆனால் சொன்னதுபோல் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பவில்லையாம். பணத்தை திருப்பி கேட்டபோது, ரூ.1.65 லட்சத்தை சலீம்பாஷா பூமிகண்ணனின் ஜி.பே கணக்கிற்கு செலுத்தி உள்ளார். மீதமுள்ள பணத்தை தராமல் இழுத்து அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பூமிகண்ணன், சலீம்பாஷா அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டு கத்தியை காட்டி மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சலீம்பாஷா கே.கே நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பூமிகண்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.