பூந்தமல்லி: திருவேற்காடு அடுத்த கோலடி பகுதியில் டாஸ்மாக் கடையை ஒட்டி பார் உள்ளது. அங்கு முனிராஜ் (29), முனி செல்வம் (24) ஆகியோர் தங்கி வேலை செய்தனர். அங்கு வரும் குடிமகன்களுக்கு தேவையான பொருட்கள் கொடுப்பதால், அவர்களுக்கு டிப்ஸ் அதிகளவில் கிடைக்கும். இரவு பார் மூடிய பிறகு, அவர்கள் அதை பங்கு பிரித்து எடுத்து கொள்வார்கள்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மது அருந்த வந்த ஒருவர், முனிராஜிக்கு ₹100 டிப்ஸ் கொடுத்து விட்டு இருவரையும் பிரித்து கொள்ளும்படி, கூறி சென்றார். ஆனால், அந்த பணத்தை முழுவதும் முனிராஜ் குடித்துவிட்டு, முனிசெல்வத்துக்கு பங்கு தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த முனி செல்வம், போதையில் வந்த முனிராஜை பாரில் இருக்கும்போது கைகளால் சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள், அவர் போதையில் விழுந்ததாக நினைத்து சென்று விட்டனர். நேற்று காலை முனிராஜ், அசைவு இல்லாமல் கிடந்தார். இதை பார்த்த சக ஊழியர்கள், அருகில் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடப்பது தெரிந்தது. தகவலறிந்து திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனி செல்வத்தை கைது செய்தனர். டாஸ்மாக் பாரில் டிப்ஸ் பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….