ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டத்தில் 1432-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் இறுதி நாள் நிகழ்ச்சியாக விவசாய குடிகள் மாநாடு நிகழ்ச்சி ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் உள்வட்டத்திற்குட்பட்ட எரவாங்குடி, தண்டலை, கீழக்குடியிருப்பு, பிராஞ்சேரி, பிச்சனூர், வெத்தியார்வெட்டு, ஆமணக்கந்தோண்டி, உட்கோட்டை (வடக்கு), உட்கோட்டை (தெற்கு), பெரியவளையம், ஜெயங்கொண்டம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தியில் பட்டா மாற்றம், உதவித்தொகை, குடும்ப அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 398 மனுக்களில் 32 மனுக்களுக்கு உடனடி தீர்வுக் காணப்பட்டு, 357 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட கலெக்டர் தலைமையில் ஜெயங்கொண்டம் வட்டத்தில் 13ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற்ற ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நிகழ்ச்சியில் மொத்தம் 1311 மனுக்கள் பெறப்பட்டு, 210 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 976 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 125 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற விவசாய குடிகள் மாநாட்டில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார். அரியலூர் மாவட்டத்தில் ஜூன் 13 முதல் 20. வரை நடைபெற்ற 1432ம் பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் 1082 மனுக்களும், செந்துறை வட்டத்தில் 730 மனுக்களும், உடையார்பாளையம் வட்டத்தில் 1311 மனுக்களும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் 701 மனுக்களும் என ஆக மொத்தம் 3824 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, 861 மனுக்கள் தீர்வு காணப்பட்டு, 2750 மனுக்கள் விசாரணையில் உள்ளது. 213 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில், உடையார்பாளையம் ஆர்டிஓ பரிமளம், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குமார், தாசில்தார் துரை, மாவட்ட ஆட்சியரக மேலாளர்(பொது) குமரையா, துணை தாசில்தார்கள், நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், விஏஓக்கள், வருவாய் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.