சேலம், ஏப். 27: சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கேன்டீனில் உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தி, காலாவதியான பிரட், பாதம் கீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் அமைந்துள்ளது. இங்கு காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரின் பேரில், மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கதிரவன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுருளி ராஜா, சிவலிங்கம் ஆகியோர் அடங்கிய குழு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, தயாரிப்பு தேதி குறிப்பிடாத 60 பன் பாக்கெட்டுகள், முந்தைய தேதியிட்ட 16 பாக்கெட்டுகள், உரிய விபரங்கள் குறிப்பிடாத பாதாம் கீர் 200 மிலி கொண்ட 36 பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட செய்தி தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டு, ₹2,000 அபராதம் விதிக்கப்பட்டது. கேன்டீனில் இருந்து ₹16 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பாதாம் கீரில் இருந்து மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது ஆய்வகத்தின் முடிவின் அடிப்படையில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.