சிவகாசி, ஜூன் 14: சிவகாசி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க கோரி பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். சிவகாசி அரசு மருத்துவமனையில் தூய்மை பணி, வாட்ச்மேன், நோயாளிகளை அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் 27 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை முழுமையாக வழங்காமல் கடந்த ஓராண்டாக ஒப்பந்ததாரர் 30 சதவீதம் வரை பிடித்தம் செய்துவிட்டு குறைந்த ஊதியத்தை வழங்குவதாக குற்றம் சாட்டியுள்ள ஊழியர்கள், நேற்று பணியை புறக்கணித்து மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையின் தூய்மை பணி உள்ளிட்ட பல்வேறு சுகாதார பணிகள் பாதிக்கப்பட்டது.