பரமக்குடி,ஜூன் 28: பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் கைத்தறி நெசவுத் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஏஐடியூசி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமையில் பரமக்குடியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கைத்தறி நெசவுத் தொழிலை பாதிக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சங்கங்களில் உற்பத்தியான அனைத்து ஜவுளி ரகங்களையும் கோஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் மாநில அரசு கொள்முதல் செய்ய வேண்டும். நெசவாளர்களுக்கு மானிய விலையில் கச்சாப் பொருட்களை வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ரிபேட் மானிய தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் நூல் கொள்முதல் செய்ய ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் உதவி கைத்தறி இயக்குனர் அனுமதி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மேளனத்தின் கௌரவத் தலைவர் ராதா, மாநில பொதுச்செயலாளர் ராஜன், மாநில செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.