சிவகங்கை, ஜூன் 11: சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித் தொழில் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித் துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மிக முக்கியமானதாகும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு(ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற விருப்பமுள்ளவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs என்ற இணையதள முகவரியில் தங்களது விபரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.