சோழவந்தான், செப். 25: சோழவந்தான் அக்ரஹாரம் சந்தான கோபால கிருஷ்ணன் கோயிலில், 12ம் ஆண்டு கிருஷ்ணர், ராதை திருக்கல்யாண வைபவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் பாராயணம், குரு கீர்த்தனைகள் நடைபெற்றது. நேற்று காலை திரளான பெண்கள் ஊர்வலமாக சீர் வரிசை பொருட்களை கோயிலுக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் சோம நாராயணன் பாகவதர் குழுவினர் பஜனை பாடல்கள் பாட, முத்துக் குத்தல், குழு நடனம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.இதனை தொடர்ந்து கிருஷ்ணர், ராதை திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. இதில் தொழிலதிபர் மணி முத்தையா, திமுக கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருது பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எம்.வி.எம் குழுமத்தினர் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை ராதா கிருஷ்ணா மகளிர் பக்த சபா மற்றும் விழாக் கமிட்டியினர் செய்திருந்தனர்.