டெல்லி : சைகோவ் -டி தடுப்பு மருந்து இன்னும் முழுமையாக பயன்பாட்டிற்கு வராததால் ஜனவரி 3ம் தேதி முதல் சிறாருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிகிறது. 15 வயது முதல் 18 வயதினருக்கு ஜனவரி 3ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது. தற்போதைய நிலையில், சைகோவ் -டி மருந்தும் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இந்த வயது வரம்பில் உள்ளவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் முதலாவதாக அனுமதி பெற்று இருந்தாலும் கூட சைகோவ் -டி தடுப்பு மருந்து இன்னும் பெரியவர்களுக்கு கூட பெருவாரியாக செலுத்தப்படவில்லை. ஆகவே ஜனவரி 3ம் தேதி முதல் சைகோவ் -டி மருந்து சிறார்களுக்கு செலுத்தப்படாது. சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கும் போது, கோவாக்சின் மட்டுமே பயன்படுத்தப்படும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், வளரும் இளம் பருவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடவேண்டியது அவசியமாகிவிட்டதாக ஒன்றிய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவர் அரோரா தெரிவித்துள்ளார்.பெரியவர்களை காட்டிலும் சிறாருக்கு கோவாக்சின் தடுப்பூசி மிக சிறந்த பலனை தருவதாக அவர் கூறியுள்ளார். மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் வலி, கைவீக்கம் போன்ற பக்க விளைவுகள் கோவாக்சினுக்கு குறைவு என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டும் கூட சிறார்களை அனுப்ப தயங்கும் பெற்றோருக்கு இந்த தடுப்பூசி திட்டம் தைரியம் கொடுப்பதாக அமையும் என்று அரோரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்….