வீரவநல்லூர், மார்ச் 6: நாங்குநேரியை அடுத்த கீழஅரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ராஜகுமார்(28). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை வீரவநல்லூரை அடுத்த வல்லத்துநம்பிகுளம் கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நாகர்கோவில் பேக்கரிக்கு வேலைக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது சேரன்மகாதேவி-களக்காடு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜகுமாரை அவ்வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜகுமார் உயிரிழந்தார். இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிந்து காட்டு மிருகங்கள் குறுக்கே பாய்ந்ததால் விபத்து ஏற்பட்டதா அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதிச் சென்றதா என்ற கோணத்தில் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.