செய்யாறு, ஜூன் 21: செய்யாறு அருகே பெண் தொழிலாளியுடன் ஸ்வீட் கடை உரிமையாளர் மாயமானதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(65). இவரது மனைவி ராணி(56). இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர். கார்த்திகேயன், செய்யாறு பஸ் நிலைய பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் பணிபுரிந்து வந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவ்வப்போது ராணி, தட்டிக்கேட்டுள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பெண்மணியை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார்களாம்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி வீட்டில் தூங்கிய கார்த்திகேயன் மறுநாள் அதிகாலை திடீரென காணவில்லையாம். மேலும் கடையில் வேலை செய்து வந்த அந்த பெண்ணும் காணவில்லை என தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராணி, பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக அனக்காவூர் போலீசில் ராணி புகார் செய்தார். அதில் பெண் தொழிலாளியுடன் கணவர் சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிந்து தேடிவருகின்றனர்.