சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி குளிப்பதை தடுக்க டிரோன்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து மெரினாவில் தடையை மீறி குளிக்க செல்பவர்கள் பலர் பலியாகியுள்ளனர்.அதன் அடிப்படையில் 2 ஆண்டுகளில் மெரினாவில் குளிக்கச்சென்று 34 பேருக்கு மேலாக மூழ்கி பலியாகினர். இந்நிலையில் இந்த இறப்பு சம்பவங்களை தடுக்க டிரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை மேற்கொள்ள உள்ளது. இதனடிப்படையில் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை ஒட்டிய பகுதிகள் முழுவதுமாக டிரோன்களை பறக்கவிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.முதற்கட்டமாக நடைபெறும் இந்த கண்காணிப்பு நடவடிக்கை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் திருவான்மியூர் கடற்கரை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலில் குளிப்பவர்களை கண்காணிப்பது மட்டுமல்லாமல் மெரினாவில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை தடுக்கும் விதமாகவும் டிரோன்களை பறக்கவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்….