சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அனைத்து வாயில்களும் இன்று இரவு வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் 107 ஏக்கரில் சென்னை உயர் நீதிமன்றம் கட்டப்பட்டது. இதனால் ஜார்ஜ் டவுன், பாரிமுனை மற்றும் பூக்கடை பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயர்நீதிமன்றத்தை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது. நாளடைவில் மக்கள் உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி செல்வது அதிக தூரமாக இருப்பதாக கருதி உயர் நீதிமன்ற வளாகத்தை வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர். இதை கவனத்தில் கொண்ட நீதிமன்ற நிர்வாகம், மக்கள் வருங்காலங்களில் இந்த பாதைக்கு உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் ஆண்டில் ஒரு நாள் மக்கள் யாரும் பயன்படுத்த முடியாத வகையில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் முதல் வாரத்தின் சனிக்கிழமையில் கடைப்பிடிப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்படும் என்றும் இந்த நேரத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என யாருக்கும் நீதிமன்றத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது….